சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
அறுபது நாடுகள் கலந்து கொள்ளும், 190 திரைப்படங்கள் திரையிடப்படும், சர்வதேச திரைப்பட விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று துவங்கியது.
இந்திய அளவில் கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா முக்கியத்துவம் பெற்றது. அதற்கு அடுத்தப்படியாக, உலகத் திரை ரசிகர்கள் பங்கேற்கும் சர்வதேச திரைப்பட விழா ஆண்டு தோறும் டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்த விழாவை கேரள மாநில அரசே நடத்துவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான 22வது சர்வதேச திரைப்பட விழா, நேற்று மாலை திருவனந்தபுரம் கனககுன்னு மாளிகை நிஷாகந்தி ஆடிட்டோரியத்தில் துவங்கியது. மாநில திரைப்பட அகாடமி தலைவர் கமல் தலைமை வகித்தார். விருது பெற்ற இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன், பழம்பெரும் வங்காள நடிகை மாதபி முகர்ஜீ, ஒலிப்பதிவாளர் ரசூல்பூக்குட்டி, நடிகை ஷீலா, கேரள மாநில அரசின் விருது பெற்ற நடிகை பிரதிஷா விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக ஒக்கி புயலில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த திரைப்பட விழா டிச., 15 வரை திருவனந்தபுரத்தில் 14 தியேட்டர்களில் நடக்கிறது. இதற்காக 9 ஆயிரம் இருக்கைகள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன.
உலக அளவில் திரை விமர்சகர்கள், திரை உலக நிபுணர்கள், ஊடகவியலாளர்கள், ரசிகர்கள், மாணவர்கள் என 11 ஆயிரம் பேருக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. முன் அனுமதி பெற்ற இவர்கள் மட்டுமே திரைப்படங்களை பார்க்க முடியும். விழா நிறைவு நாளில் சிறந்த படத்திற்கு தங்க காகம் விருது வழங்கப்படும்.
முதல்வர் பங்கேற்கவில்லை : ஒக்கி புயலால் நுாற்றுக் கணக்கான மீனவர்கள் இறந்ததை தொடர்ந்து, திரைப்பட விழாவில் முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்ளவில்லை. சர்வதேச அளவில் பிரதிநிதிகள் கலந்து கொள்வதால், முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவை ஒத்திவைக்க முடியவில்லை. எனவே, அதிகாரிகள் திரை உலகத்தினரை வைத்து துவக்க விழாவை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி, கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
நமது சிறப்பு நிருபர்